நியூ யார்க் நகரம்…
நியூ யார்க் - அமெரிக்கா வந்த நாளிலிருந்து இந்த ஊருக்கு ஒரு முறை வந்து போக வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தேன். அதிலும் முக்கியமாக சுதந்திர தேவி சிலையை நான் ஏன் இன்னும் போய்ப் பார்க்கவில்லை என்று இரண்டு வருடம் முன்னால் இங்கு வந்த போதே அம்மா கேட்டுக் கொண்டே இருப்பார். இதோ இப்போது, அமெரிக்காவின் வணிகத் தலைநகரத்தில் நான்.
ஜனவரி மாதமே நியூயார்க் போக வேண்டி இருக்கலாம் என்ற போது, ‘ஐயோ குளுரும், பனி பெய்யும்’ என்று ஜகா வாங்கிக் கொண்டு சான்டியாகோவில் போய்ப் பதுங்கிக் கொண்டேன். மார்ச்சில் வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் இந்த ஊருக்கு நான் வந்ததே.
‘மார்ச்சா, சூப்பர்.. பனியெல்லாம் முடிஞ்ச பின்னாடி வரீங்க’ என்றார்கள் நியூஜெர்சி வாழ் நண்பர்கள். ஆக, கையில் அதிகம் குளிர்காலத் துணிமணி இல்லாமல், வெறும் மெல்லிய மேலங்கிகளோடு நான் நியூயார்க்கில் நுழைந்த நாள் நன்றாக வெயிலடித்துக் கொண்டிருந்தது. பின்மதிய இளவெயிலை ரசித்துக் கொண்டே எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஓட்டல் அறைக்குள் பதுங்கிக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை கிளம்பும்போது நண்பரொருவர் ‘வழி’காட்ட வந்தார். ‘அதெல்லாம் நானே போயிக்குவேன், எத்தனை ஊரு பார்த்திருக்கோம்!’ என்று தெனாவெட்டாக கிளம்ப இருந்த என்னை நிறுத்தி மெல்ல ரயிலில் அழைத்துப் போனார். காலை ஒன்பது மணிக்கு ஓட்டல் வாசல் தாண்டியவுடன் சில்லென முகத்தில் அடித்தது காற்று. ஒன்று இரண்டு, மூன்று என்று வெங்காயம் போல் நான்கு சட்டைகள் போட்டிருந்தும், உள்ளிருந்த உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ட்ரெயினிலிருந்து இறங்கியவுடன் முதல் செலவாக நியூயார்க் போய் ஒரு ஸ்வெட்டர் வாங்கி தலையை மறைக்க ஸ்கார்ப் வாங்கி அதன் பின் தான் அலுவலகமே போனேன்.
மதியத்தோடு அலுவலகத்திலிருந்து அனுப்பிவிட்டதில்(துரத்தி விட்டதில்), வெளியே வந்த போது தான், மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. அடுத்த இன்றியமையாச் செலவாக ஒரு குடை! முன்னறிவிப்பில்லாமல் வந்த மழையை நான் திட்டித் தீர்க்குமுன் அடுத்த நாள் காலை உணவுக்குப் போகும்போது ஜன்னல் வழியே பார்த்தால், பனி பெய்து கொண்டிருந்தது.
ஏழு சட்டை, காலுக்கும் இரண்டு அடுக்கு ஆடைகள், கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப், தலைக்கு ஒரு தொப்பி, கையுறை, எல்லாம் தாண்டிக் குளிரும் முகம்! ‘ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம்!’ என்று என்னை நானே நொந்து கொண்டேன். ‘இது தான் கடைசி பனி’ என்றார்கள். நல்லவேளையாக வானிலைக்கும் என் மீது கருணை வந்து அதுவே கடைசி பனியாகிப் போனது.
ஹைதராபாத், செகந்தராபாத்தின் ஹுசைன் சாகர் மாதிரி, நியூயார்க் நகரம்-நியூஜெர்சி இடையே ஓடிக் கொண்டிருக்கிறது ஹட்சன் ஆறு. தீவு நகரமான நியூயார்க்கின் வெவ்வேறு பேட்டைகள் கூட ஹட்சனால் கிழக்காறு என்னும் ஆறால் (நன்றி கொத்ஸ்) பிரிக்கப்பட்டே இருக்கிறது. நான் தங்கி இருப்பது ஹட்சன் நதிக் கரையோர ஜெர்சி நகரம். இங்கிருந்து நியூயார்க் நகரம் செல்ல நீரைக் குடைந்து பாதை போட்டு பாத் (PATH) என்ற பெயரில் ரயில் விடுகிறார்கள். நியூயார்க்கின் மன்ஹாட்டன் தீவுக்குப் போகும் இந்த ரயிலிலிருந்து இறங்கி மீண்டும் சப்வே என்று ரயிலைப் பிடித்து ப்ருக்ளின் சென்றால் அலுவலகம். சரியான இணைப்பு ரயில்கள் கிடைத்துவிட்டால், மொத்தம் முப்பதே நிமிட பயணம் என்கிறார் கூகிளாண்டவர்.
முன்காலத்தில் path-காலங்களுக்கு முன்னர் நியூயார்க்கின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணியர் கப்பல்கள் போய்க் கொண்டிருந்தன என்றார் பல்லாண்டு கால நியூயார்க் வாசி ஒருவர். இப்போதும் ஒரு சில பயணியர் கப்பல்கள் மன்ஹாட்டனின் சில துறைகளுக்குச் செல்லத் தான் செல்கின்றன. இன்னும் அந்த வழியில் நான் போய்ப் பார்க்கவில்லை..
குளிருக்கும் மழைக்கும் ஏற்றபடி உடுக்கப் பழகிக் கொண்டால், நியூயார்க் ரொம்பவே கலகலப்பான நகரமாக இருக்கிறது. நேரம் இருந்தால் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. நியூயார்க் மக்கள் ரொம்பவும் சுறுசுறுப்பானவர்களாக, திருத்தமாக இருக்கிறார்கள். இரண்டு மூன்று ரயில் பிடித்து அலுவலகம் செல்வது அப்படி ஒன்றும் உடல் வருத்தும் பயணமாக இவர்களுக்குத் தெரிவதில்லை போலும். கலிபோர்னியாவில் காரை விட்டு இறங்காமல் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த நடை எல்லாம் ஆரம்பத்தில் மலைப்பாக இருந்தாலும் இப்போது பழகித் தான் விட்டது. அதிலும், நம்மைத் தவிர எல்லாரும் வெகு வேகமாக நடப்பதாக தோன்றும் போது நம் உலகமும் வேகம்பிடித்து விடுகிறது.
வந்திறங்கியவுடன் ஏனோ இந்த ஊர் எனக்கு நம்ம மும்பையை நினைவுப்படுத்தியது. அதற்கேற்றாற்போல், ஜெர்சி நகரத்தில், என் ஓட்டலுக்கு மிக அருகில் ஒரு முழுத் தெருவின் பெயரே ‘லிட்டில் பாம்பே’. மும்பை மக்கள் போலவே இங்கும் மக்கள் படு வேகமாக இருக்கிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு கூட நிறைய மக்கள் தெருவில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நம்ம ஊரில் டவுன் எனச் சொல்லப்படும் நகரத்தின் முக்கிய பகுதியை அமெரிக்காவில் டவுன் டௌன் என்பார்கள். Downtownகள் மட்டுமே பார்த்திருக்கும் எனக்கு இந்த ஊரில் தான் முதல்முதலில் மிட் டௌன்(mid-town), அப் டௌன்(up-town) என்று எல்லாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா இடத்திலும் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களும் சரி சமமாக நிறைந்திருக்கிறார்கள்.
மும்பையைப் போலவே ஆங்காங்கு அழுக்கும் குப்பையுமாக அதற்கும் குறையில்லை. நடப்பவர்களுக்கான போக்குவரத்துச் சின்னங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனம்போன போக்கில் தெருவைக் கடக்கிறார்கள்.
வால் தெருவில் எங்கள் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற முதல் நாள், அம்மாவுக்கு போன் செய்து ‘அம்மா, நான் வால் ஸ்ட்ரீட்ல இருக்கேன்’ என்ற போது என்னைக் காட்டிலும் அவர் தான் அதிகம் மகிழ்ந்து போனார். வங்கியில் வேலை பார்த்தவர் ஆதலால், வால் தெருவின் ஒவ்வொரு வங்கி, வணிக அலுவலகத்தின் பெயராக சொல்லிக் கொண்டே வந்து, ஒவ்வொரு கட்டிடத்தின் முக்கியத்துவம் கூடச் சொல்லத் தொடங்கிவிட்டார்! அந்தத் தெருவுக்கு எந்த நாள் போனாலும் யாராவது போட்டோ காமிராவோடு சுற்றுவதைப் பார்க்க முடிகிறது.
சுதந்திர தேவி சிலையைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, இப்போது நண்பர்கள் உறவினர்கள் யார் வந்தாலும் சுதந்திர தேவி, எல்லிஸ் தீவு என்று கதை சொல்லும் அளவுக்குத் தயாராகி விட்டேன்.(நம்ம கதை விட கேட்கணுமா என்ன)
நியூயார்க் மக்கள், அமெரிக்காவின் மற்ற ஊர்களைக் காட்டிலும் புத்திசாலிகள் போலும். ஒரே மாதிரி ஊர்கள், தெருக்கள், போக்குவரத்துச் சின்னங்கள் என்று பார்த்துப் பழகி இருந்த எனக்கு, இந்த ஊரின் சப்வேக்களைப் பார்க்கப் பார்க்க ஒவ்வொரு தரமும் ஆச்சரியமாக இருக்கிறது.
சப்வே எனப்படும் பூமிக்கடியில் ஓடும் நியூயார்க் நகர ரயில்கள், A, B, C, 1, 2 என்று நிறைய எண்கள்/எழுத்துக்களுடன் ஓடுகிறது. விரைவு வண்டியான சப்வே ஏ போகும் அதே பாதையில் சப்வே சி மெல்லப் போகும். ஒரு சப்வே ஸ்டேசன் என்பது எட்டுக்கு மேற்பட்ட வாயில்களோடு ஒரு எலி வளை போல இருக்கிறது. குளிர்காலங்களில், ஒரு தெருவின் சப்வே ஸ்டேசனுக்குள் புகுந்து அடுத்த தெருவின் வாசல் வழியாக வெளிவரலாம் போலும். ‘ஸ்டேசன் வாசல்ல நில்லு, நான் வந்துடறேன்’ என்றெல்லாம் எங்க ஊர் சப்வேக்களைப் பற்றிப் பேச முடியாது.
முதல் சில நாட்கள் இந்த எலிவளைகளைப் பார்த்து ரொம்பவே குழம்பிப் போய்விட்டேன். ஒரு சில சமயம், தெருவின் இந்தப் பக்கத்து வாசல் வழியாக உள்ளே போனால் ஒரு சப்வே, அதே தெருவைக் கடந்து வேறு பக்கமாக போனால் அது எதிர்ப்பக்கம் போகும் வண்டி. வேறு சில தெருக்களில் பார்த்தால், முதல் தெரு சப்வே ஸ்டேசனுக்குள் நுழைந்து மூன்றாவது தெரு சப்வே ஸ்டேசனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போகலாம். அமெரிக்கா ஒரு டெம்ப்ளேட் நாடு (எல்லா ஊரும் ஒரே மாதிரி) என்று நியூயார்க் வரும்வரை நினைத்திருந்த எனக்கு சப்வே ஸ்டேசன்கள் மிகப் பெரிய ஆச்சரியம். இத்தனை வழிகளிலும், இத்தனை வண்டிகளிலும் பயணித்து, மக்கள் எப்படி குழம்பிப் போகாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.
சப்வே, பாத் தவிர பூமிக்கு மேலே ஓடும் பொதுத் துறை வண்டிகளுக்கும் இங்கே குறைவில்லை. பேருந்துகள், லைட் ரயில் எனப்படும் மென்ரயில்கள், பெரிய புறநகர் ரயில்கள் என்று வேறு விதமான போக்குவரத்தும் நிறைந்து தான் இருக்கிறது. ஒரு வழியாக வெயில் காலம் வேறு தொடங்கிவிட்டதில் சில நாட்கள் எட்டு மணி வரை சூரியன் மறையாமலே இருக்கிறான். ம்… வேளையோடு அலுவலகம் விட்டு வெளியில் போக மட்டும் முடிந்தால்….
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

