pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

நியூ யார்க் நகரம்…

நியூ யார்க் - அமெரிக்கா வந்த நாளிலிருந்து இந்த ஊருக்கு ஒரு முறை வந்து போக வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தேன். அதிலும் முக்கியமாக சுதந்திர தேவி சிலையை நான் ஏன் இன்னும் போய்ப் பார்க்கவில்லை என்று இரண்டு வருடம் முன்னால் இங்கு வந்த போதே அம்மா கேட்டுக் கொண்டே இருப்பார். இதோ இப்போது, அமெரிக்காவின் வணிகத் தலைநகரத்தில் நான்.

ஜனவரி மாதமே நியூயார்க் போக வேண்டி இருக்கலாம் என்ற போது, ‘ஐயோ குளுரும், பனி பெய்யும்’ என்று ஜகா வாங்கிக் கொண்டு சான்டியாகோவில் போய்ப் பதுங்கிக் கொண்டேன். மார்ச்சில் வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் இந்த ஊருக்கு நான் வந்ததே.

‘மார்ச்சா, சூப்பர்.. பனியெல்லாம் முடிஞ்ச பின்னாடி வரீங்க’ என்றார்கள் நியூஜெர்சி வாழ் நண்பர்கள். ஆக, கையில் அதிகம் குளிர்காலத் துணிமணி இல்லாமல், வெறும் மெல்லிய மேலங்கிகளோடு நான் நியூயார்க்கில் நுழைந்த நாள் நன்றாக வெயிலடித்துக் கொண்டிருந்தது. பின்மதிய இளவெயிலை ரசித்துக் கொண்டே எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஓட்டல் அறைக்குள் பதுங்கிக் கொண்டேன்.

அடுத்த நாள் காலை கிளம்பும்போது நண்பரொருவர் ‘வழி’காட்ட வந்தார். ‘அதெல்லாம் நானே போயிக்குவேன், எத்தனை ஊரு பார்த்திருக்கோம்!’ என்று தெனாவெட்டாக கிளம்ப இருந்த என்னை நிறுத்தி மெல்ல ரயிலில் அழைத்துப் போனார். காலை ஒன்பது மணிக்கு ஓட்டல் வாசல் தாண்டியவுடன் சில்லென முகத்தில் அடித்தது காற்று. ஒன்று இரண்டு, மூன்று என்று வெங்காயம் போல் நான்கு சட்டைகள் போட்டிருந்தும், உள்ளிருந்த உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ட்ரெயினிலிருந்து இறங்கியவுடன் முதல் செலவாக நியூயார்க் போய் ஒரு ஸ்வெட்டர் வாங்கி தலையை மறைக்க ஸ்கார்ப் வாங்கி அதன் பின் தான் அலுவலகமே போனேன்.

மதியத்தோடு அலுவலகத்திலிருந்து அனுப்பிவிட்டதில்(துரத்தி விட்டதில்), வெளியே வந்த போது தான், மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. அடுத்த இன்றியமையாச் செலவாக ஒரு குடை! முன்னறிவிப்பில்லாமல் வந்த மழையை நான் திட்டித் தீர்க்குமுன் அடுத்த நாள் காலை உணவுக்குப் போகும்போது ஜன்னல் வழியே பார்த்தால், பனி பெய்து கொண்டிருந்தது.

ஏழு சட்டை, காலுக்கும் இரண்டு அடுக்கு ஆடைகள், கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப், தலைக்கு ஒரு தொப்பி, கையுறை, எல்லாம் தாண்டிக் குளிரும் முகம்! ‘ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம்!’ என்று என்னை நானே நொந்து கொண்டேன். ‘இது தான் கடைசி பனி’ என்றார்கள். நல்லவேளையாக வானிலைக்கும் என் மீது கருணை வந்து அதுவே கடைசி பனியாகிப் போனது.

ஹைதராபாத், செகந்தராபாத்தின் ஹுசைன் சாகர் மாதிரி, நியூயார்க் நகரம்-நியூஜெர்சி இடையே ஓடிக் கொண்டிருக்கிறது ஹட்சன் ஆறு. தீவு நகரமான நியூயார்க்கின் வெவ்வேறு பேட்டைகள் கூட ஹட்சனால் கிழக்காறு என்னும் ஆறால் (நன்றி கொத்ஸ்) பிரிக்கப்பட்டே இருக்கிறது. நான் தங்கி இருப்பது ஹட்சன் நதிக் கரையோர ஜெர்சி நகரம். இங்கிருந்து நியூயார்க் நகரம் செல்ல நீரைக் குடைந்து பாதை போட்டு பாத் (PATH) என்ற பெயரில் ரயில் விடுகிறார்கள். நியூயார்க்கின் மன்ஹாட்டன் தீவுக்குப் போகும் இந்த ரயிலிலிருந்து இறங்கி மீண்டும் சப்வே என்று ரயிலைப் பிடித்து ப்ருக்ளின் சென்றால் அலுவலகம். சரியான இணைப்பு ரயில்கள் கிடைத்துவிட்டால், மொத்தம் முப்பதே நிமிட பயணம் என்கிறார் கூகிளாண்டவர்.

முன்காலத்தில் path-காலங்களுக்கு முன்னர் நியூயார்க்கின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணியர் கப்பல்கள் போய்க் கொண்டிருந்தன என்றார் பல்லாண்டு கால நியூயார்க் வாசி ஒருவர். இப்போதும் ஒரு சில பயணியர் கப்பல்கள் மன்ஹாட்டனின் சில துறைகளுக்குச் செல்லத் தான் செல்கின்றன. இன்னும் அந்த வழியில் நான் போய்ப் பார்க்கவில்லை..

குளிருக்கும் மழைக்கும் ஏற்றபடி உடுக்கப் பழகிக் கொண்டால், நியூயார்க் ரொம்பவே கலகலப்பான நகரமாக இருக்கிறது. நேரம் இருந்தால் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. நியூயார்க் மக்கள் ரொம்பவும் சுறுசுறுப்பானவர்களாக, திருத்தமாக இருக்கிறார்கள். இரண்டு மூன்று ரயில் பிடித்து அலுவலகம் செல்வது அப்படி ஒன்றும் உடல் வருத்தும் பயணமாக இவர்களுக்குத் தெரிவதில்லை போலும். கலிபோர்னியாவில் காரை விட்டு இறங்காமல் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த நடை எல்லாம் ஆரம்பத்தில் மலைப்பாக இருந்தாலும் இப்போது பழகித் தான் விட்டது. அதிலும், நம்மைத் தவிர எல்லாரும் வெகு வேகமாக நடப்பதாக தோன்றும் போது நம் உலகமும் வேகம்பிடித்து விடுகிறது.

வந்திறங்கியவுடன் ஏனோ இந்த ஊர் எனக்கு நம்ம மும்பையை நினைவுப்படுத்தியது. அதற்கேற்றாற்போல், ஜெர்சி நகரத்தில், என் ஓட்டலுக்கு மிக அருகில் ஒரு முழுத் தெருவின் பெயரே ‘லிட்டில் பாம்பே’. மும்பை மக்கள் போலவே இங்கும் மக்கள் படு வேகமாக இருக்கிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு கூட நிறைய மக்கள் தெருவில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நம்ம ஊரில் டவுன் எனச் சொல்லப்படும் நகரத்தின் முக்கிய பகுதியை அமெரிக்காவில் டவுன் டௌன் என்பார்கள். Downtownகள் மட்டுமே பார்த்திருக்கும் எனக்கு இந்த ஊரில் தான் முதல்முதலில் மிட் டௌன்(mid-town), அப் டௌன்(up-town) என்று எல்லாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா இடத்திலும் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களும் சரி சமமாக நிறைந்திருக்கிறார்கள்.

மும்பையைப் போலவே ஆங்காங்கு அழுக்கும் குப்பையுமாக அதற்கும் குறையில்லை. நடப்பவர்களுக்கான போக்குவரத்துச் சின்னங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனம்போன போக்கில் தெருவைக் கடக்கிறார்கள்.

வால் தெருவில் எங்கள் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற முதல் நாள், அம்மாவுக்கு போன் செய்து ‘அம்மா, நான் வால் ஸ்ட்ரீட்ல இருக்கேன்’ என்ற போது என்னைக் காட்டிலும் அவர் தான் அதிகம் மகிழ்ந்து போனார். வங்கியில் வேலை பார்த்தவர் ஆதலால், வால் தெருவின் ஒவ்வொரு வங்கி, வணிக அலுவலகத்தின் பெயராக சொல்லிக் கொண்டே வந்து, ஒவ்வொரு கட்டிடத்தின் முக்கியத்துவம் கூடச் சொல்லத் தொடங்கிவிட்டார்! அந்தத் தெருவுக்கு எந்த நாள் போனாலும் யாராவது போட்டோ காமிராவோடு சுற்றுவதைப் பார்க்க முடிகிறது.

சுதந்திர தேவி சிலையைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, இப்போது நண்பர்கள் உறவினர்கள் யார் வந்தாலும் சுதந்திர தேவி, எல்லிஸ் தீவு என்று கதை சொல்லும் அளவுக்குத் தயாராகி விட்டேன்.(நம்ம கதை விட கேட்கணுமா என்ன)

நியூயார்க் மக்கள், அமெரிக்காவின் மற்ற ஊர்களைக் காட்டிலும் புத்திசாலிகள் போலும். ஒரே மாதிரி ஊர்கள், தெருக்கள், போக்குவரத்துச் சின்னங்கள் என்று பார்த்துப் பழகி இருந்த எனக்கு, இந்த ஊரின் சப்வேக்களைப் பார்க்கப் பார்க்க ஒவ்வொரு தரமும் ஆச்சரியமாக இருக்கிறது.

சப்வே எனப்படும் பூமிக்கடியில் ஓடும் நியூயார்க் நகர ரயில்கள், A, B, C, 1, 2 என்று நிறைய எண்கள்/எழுத்துக்களுடன் ஓடுகிறது. விரைவு வண்டியான சப்வே ஏ போகும் அதே பாதையில் சப்வே சி மெல்லப் போகும். ஒரு சப்வே ஸ்டேசன் என்பது எட்டுக்கு மேற்பட்ட வாயில்களோடு ஒரு எலி வளை போல இருக்கிறது. குளிர்காலங்களில், ஒரு தெருவின் சப்வே ஸ்டேசனுக்குள் புகுந்து அடுத்த தெருவின் வாசல் வழியாக வெளிவரலாம் போலும். ‘ஸ்டேசன் வாசல்ல நில்லு, நான் வந்துடறேன்’ என்றெல்லாம் எங்க ஊர் சப்வேக்களைப் பற்றிப் பேச முடியாது.

முதல் சில நாட்கள் இந்த எலிவளைகளைப் பார்த்து ரொம்பவே குழம்பிப் போய்விட்டேன். ஒரு சில சமயம், தெருவின் இந்தப் பக்கத்து வாசல் வழியாக உள்ளே போனால் ஒரு சப்வே, அதே தெருவைக் கடந்து வேறு பக்கமாக போனால் அது எதிர்ப்பக்கம் போகும் வண்டி. வேறு சில தெருக்களில் பார்த்தால், முதல் தெரு சப்வே ஸ்டேசனுக்குள் நுழைந்து மூன்றாவது தெரு சப்வே ஸ்டேசனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போகலாம். அமெரிக்கா ஒரு டெம்ப்ளேட் நாடு (எல்லா ஊரும் ஒரே மாதிரி) என்று நியூயார்க் வரும்வரை நினைத்திருந்த எனக்கு சப்வே ஸ்டேசன்கள் மிகப் பெரிய ஆச்சரியம். இத்தனை வழிகளிலும், இத்தனை வண்டிகளிலும் பயணித்து, மக்கள் எப்படி குழம்பிப் போகாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.

சப்வே, பாத் தவிர பூமிக்கு மேலே ஓடும் பொதுத் துறை வண்டிகளுக்கும் இங்கே குறைவில்லை. பேருந்துகள், லைட் ரயில் எனப்படும் மென்ரயில்கள், பெரிய புறநகர் ரயில்கள் என்று வேறு விதமான போக்குவரத்தும் நிறைந்து தான் இருக்கிறது. ஒரு வழியாக வெயில் காலம் வேறு தொடங்கிவிட்டதில் சில நாட்கள் எட்டு மணி வரை சூரியன் மறையாமலே இருக்கிறான். ம்… வேளையோடு அலுவலகம் விட்டு வெளியில் போக மட்டும் முடிந்தால்….

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

9 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com

Confessions of a Shopaholic

சின்ன வயதிலிருந்து எனக்குப் பழக்கமான ஒரே நல்ல வழக்கம் புத்தகம் படிப்பது. கடந்த ஒரு வருடமாக அந்தப் பழக்கம் கூட என்னைவிட்டுப் போய்விட்டதோ என்று ஒரு தீவிர சந்தேகம் எனக்கு! எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் படிக்க முடியாமல், என்னவோ படிப்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்ட ஒரு உணர்வு. நல்ல வேளையாக எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் படிக்கும் வேகம் என்னுள் இன்னும் இருக்கிறது என்று நிருபிக்கும் வகையாக சோபி கின்சில்லரின் “Confessions of a Shopaholic” கையில் கிடைத்தது.

கதை ஒன்றும் பெரிய விசயமில்லை. நம்ம ஊரு பகல்கனவு கண்ட தயிர்க்காரி கதையைக் கொஞ்சம் இந்தக் காலத்து ஷாப்பிங் ஆசை பிடித்த பெண்களின் மீது ஏற்றிப் பின்னி இருக்கிறார். ஆனால் கதை சொன்ன விதம் தான் ரொம்பவும் அருமை. ஒரு காலத்தில் என் பாட்டி சொன்ன கதை போல ஒரு தொடர்ச்சியோடு போகிறது கதை. அதிலும் கற்பனையிலேயே கோட்டை கட்டும் கதைநாயகி ரெபெக்கா மனதில் நினைப்பதை எல்லாம் எழுதிக் கொண்டே வந்ததில், அவள் யோசிக்கும் விதம் போல் நாமே அடுத்தடுத்து யோசிக்கத் தொடங்கி விடுகிறோம்.

முக்கியமாக அவளின் பேதைத்தனமான எண்ணப் போக்கும், அவ்வளவு கடன் இருக்கும்போது கூட ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவதும், கடைத் தெருவுக்குப் போவதும் ஏதாவது வாங்குவதுமே அவளை மகிழச் செய்வதும் என்று அவள் தானே கதை நாயகியாகவும் நகைச்சுவை அரசியாகவும் இருக்கிறாள். ஓரளவுக்கு அடுத்து என்ன என்று ஊகிக்க முடிகிறது தான். ஆனாலும் அந்த ஊகம் கூட சுவையாக இருக்கிறது.

Girly Girl புத்தகம் என்று நண்பன் ஒருவன் சொன்னான், சின்ன வயதுப் பெண்களில் மனநிலையை அழகாக பிரதிபலிக்கத் தான் செய்கிறது. சொந்தமாக சம்பாதிக்கும் 23 வயதான பெண்ணான கதைநாயகி கூட இப்படி வரவுக்கு மீறி செலவு செய்யும் freakஆக இருப்பது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியம். நானும் ஒரு காலத்தில் கடை கடையாகப் போய் - (நம்ம ஊர் ரங்கநாதன் தெரு மாதிரி ஹைதராபாத்தில் கோடி, சார்மினார் ரேஞ்சுங்க நாங்க.. )- இதே மாதிரி கைக்கொள்ளாமல் வாங்கி வந்ததுண்டு தான். ஆனால் அதிலும் கூட ஒரு தெளிவு இருக்கும் (ஆமாமாம் என்று என் அப்பா முணுமுணுப்பது கேட்கிறதுதான்..) - வாங்கும் சம்பளத்தில் ஒரு பத்து பதினைந்து சதவீதத்துக்கு மேல் இது போன்ற செலவு நாங்கள் செய்ததில்லை..

குடும்பத்துக்கோ சேமிப்புக்கோ பணம் செலவு செய்யத் தேவையில்லாத பெண்கள் இயல்பாக செலவு செய்வதைக் கூட இந்தப் புத்தகம் அழகாகவே படம் பிடித்துக் காட்டுகிறது கதை. கடைசியில், பெக்கி தன் வரவு செலவைச் சரியாக நிர்வகிக்காத பொறுப்பின்மையை தானே புரிந்து கொண்டது எல்லாவற்றிலும் அழகாக வந்து முடிந்துவிட்டது.

இது படமாக வந்திருக்கிறதாம், இத்தோடு நில்லாமல், அடுத்தடுத்து இதே சோபி கின்ஸில்லா மேலும் மேலும் ஷாப்பஹாலிக் தொடர்கள் எழுதி இருப்பதாக தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாக இருந்திருந்தால், ரெபக்கா மாதிரியே அடுத்தடுத்து அந்தப் புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பேன்.. நல்லவேளையாக வளர்ந்துவிட்டேன்..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

7 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com

ஒரு வருட பாக்கி..

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.

The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற ஒரு அழகான படம் தான் டைரி ஆப் ஆன் ப்ராங்க். இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஒளிந்து வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் கதை.

ஆச்சரியம் என்னவென்றால் ஆன(Anne - கடைசி e ஐ, அவுக்கும் ஆவுக்கும் இடையில் படிக்க வேண்டும்) ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய தன் சொந்த டைரி, உண்மைக் கதை. இரண்டு முழு வருடங்கள் மூன்று சின்ன அறைகள் கொண்ட வீட்டில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒளிந்து வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணப் போக்கு, தினசரி நடவடிக்கை, அந்தச் சூழ்நிலையில் கூட மலரும் மெல்லிய ஈர்ப்பு, காதல், அம்மாக்களுக்கும் பதினாறுகளில் இருக்கும் பெண்களுக்குமிடையில் இருக்கும் வழக்கமான புரிதலின்மை. இரண்டு முழு வருடங்கள் இரண்டு குடும்பங்கள் முழுமையாக ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தமையால் ஏற்படும் சங்கடங்கள், நெருக்கம், சண்டை என்று அன்றாட நிகழ்வுகளை அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆன..

படம் யாரோ சொன்னார்கள் என்று எடுத்துப் பார்த்தேன், அதன் பின் அந்தப் புத்தகத்தை அதைவிட ஆர்வமாக எடுத்துப் படித்தேன். அதுவும் ஒரு இனிமையான அனுபவம்…

Swing Kids
போர் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் பைத்தியக்காரத்தனம். ஹிட்லரின் ஜெர்மனியில் குஞ்சு குளுவான்கள் எல்லாம் யூதர்களை எதிர்த்து, எதிர்ப்படும் யூதர்களை எல்லாம் கொசு அடிப்பது போல் நசுக்கி விட்டுப் போனது பற்றி பியானிஸ்ட் பேசியதென்றால், அந்த ஒட்டு மொத்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தனித்து நின்ற மனிதர்களும் ஜெர்மனியில் இருந்திருக்கிறார்கள் என்கிறது swing kids.

ஹிட்லர் தீயது என்று ஒதுக்கிய அமெரிக்க பாப் இசையைக் கேட்டு, யூதர்களின் பாடல்களைப் பாராட்டி, இசைத்து வாழ்ந்த இந்தச் சில இளைஞர்கள், கலை மூலமாகவே நாசிக்களுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினார்களாம். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த பூமியில் உருண்டை என்று சொன்ன சாக்ரடீஸ் போல யூதர்களை மனிதர்கள் என்று நினைத்த இந்தச் சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு work campகளுக்கு அனுப்பப்பட்டனராம்.

‘ஹிட்லர் செய்வது தவறு என்றால் அவன் மட்டுமே அதற்குப் பொறுப்பல்ல. அவனைத் தவறு செய்ய விட்டுவிட்டு எதிர்ப்பு காட்டாமல் சும்மா இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பெரும்பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும். எதிர்ப்பைப் பதிவு செய்யுமிடம் வீடு மட்டுமல்ல.. வெளியில் செய்ய வேண்டும், உரத்துச் செய்யவேண்டும்’ - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எதிர்ப்பை அமெரிக்க யூத இசை மூலம் பதிவு செய்கிறான் பீட்டர்.

ஒரு காலத்தில் ஹிட்லரை எதிர்த்து, அவனின் செயல்களை வெறுத்து swing இரவுக் கிளப்களை கதி என்று கிடந்த இரண்டு இளைஞர்கள், நாசிப் படையில் சேர்ந்த பின்னால் எப்படி உருவேற்றப்பட்டுகிறார்கள், எப்படி சொந்த குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு வெறியேற்றப்படுகிறார்கள், அந்த மடத்தனத்திலிருந்து, நாஜிப் படைகளின் யூத வெறுப்பு மந்திரக்கட்டிலிருந்து எப்படி ஒருவன் மட்டும் வெளிவருகிறான், அதன் பின்னான அந்த நண்பர்களின் நட்பும் விரிசலும்.. கதை இரண்டு நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல. swing இயக்கம், நாஜிப் படைகளின் யூதவெறுப்பைப் பிஞ்சு மனங்களில் பதியவைக்கும் திறமை, நல்ல மனிதனாக வளரும் குழந்தைகள் எப்படி மதம்பிடித்த வெறியர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம்.. அழகான படம்..

The Prize winner of Defiance, Ohio
நம்மூர்ப் பெண்களைப் போல வேளா வேளைக்கு குடும்பத்தைக் கவனித்து, பொறுப்பில்லாத கணவனை மன்னித்து, அவனுக்கும் சேர்த்து தானே பணம் சம்பாதித்து - கடமை தவறாத அழகான அமெரிக்க மனைவி எவலின். கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகள் கொண்ட தனது வீட்டைக் கூட தன் சின்னச்சின்ன ஜிங்கிள் எழுதும் திறமையால் மட்டும் காப்பாற்றும் எவலின் அமெரிக்க வாழ்வியலில் கூட அமைவது எனக்குப் புதிது.

தன் எழுதும் திறமையைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற எழுத்தாளராகி இருந்திருந்தால் உலகம் பார்த்திருக்க முடியும். உலகம் எங்கும் சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தும் அந்தச் சின்ன கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் கட்டுண்டு கிடந்த எவலின் என்ன சாதித்தாள்? அவள் கதையை எழுதி உலகுக்குச் சொல்ல, அவளின் மகள் இல்லாமல் போயிருந்தால் சுவடு தெரியாமல் போயிருப்பாள். ஆனால் எவலின் போன்ற பெண்கள் தான் அடுத்த தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறார்கள்; அந்தக் குடும்பத்துக்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள்.

சிரித்த முகத்துடன், எத்தனை கஷ்டம் வந்தபோதும் புன்னகையோடு எதிர்கொள்ளும் எவலின் ஒரு கவிதையான பாத்திரம். பழைய காலத்துத் தமிழ்ப்படங்கள் காட்டும் பாசமான தாயாராவும், அடிபணியும் மனைவியாகவும் இருக்கும்போதும் சோகத்தைப் பிழியாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அம்மா வாத்தாக எவலின் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

A Family Thing
எல்லா ஊர்க் கதைகளிலும் பெண்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்களாக, ஆனால் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போபவர்களாக…

எல்லா ஊர்களிலும் பெண்கள் தான் அதிகமாக, சுலபமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். மிக இயல்பாக.. அவர்களின் எண்ணம் பற்றிய கவலை இல்லாதவர்களால் சுலபமாக.. (படம் பார்த்த அன்று எழுதி வைத்தது இது.. மேலும் தெரிந்து கொள்ள படம் பாருங்கள் அல்லது அது பற்றிப் படியுங்கள்..)

woh lamhe அந்தக் கணங்கள்.
அழகான சில கணங்களைப் பற்றிய ஒரு படம்.. அழகான காதல்.. அந்த அளவுக்கு உயிரினும் இனிய காதல்கள் பொய் என்ற எண்ணம் ஏனோ ஏற்படவே இல்லை. அது போன்ற ஒரு காதலுக்காக ஏங்குகிறது மனசு. வாழ்க்கை, எதிர்காலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணுக்காக மட்டுமே வாழும் ஒருவன் - வோ லம்ஹே ஒரு உண்மைக் கதையாம்! அது போன்ற ஒரு காதல் கிடைக்க பர்வீன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஷீஷ்ரோப்ரீனியா போன்ற வியாதி அவளைப் பிரித்தது தான் பாவம்..

The Dreamer - Sonador
ஒவ்வொரு மகளின் - மகனின் - கனவும் தன் தந்தை போல வரவேண்டும் என்பதே.. தந்தை தனக்கு அவ்வளவாக பிடிக்காத, அதனால் பழக்காத அவரின் தொழிலான பந்தயக் குதிரை வளர்ப்பை அவரே ஆர்வத்துடன் மகளுக்குக் கற்றுக் கொடுக்க வைக்கும் அழகிய பெண்ணின் கதை.. அந்தப் பெண் போன்றே அப்பாவின் தொழிலில் புகுவதற்கு எனக்கும் ஆசை என்பதாலோ என்னவோ இந்தப் படம் அத்தனை ஈர்த்துவிட்டது…

கோதாவரி (தெலுங்கு - இன்னும் தமிழுக்கு வராத தெலுங்கு :) )
அற்புதமான படம்.. செ.லூயிஸில் இருந்தபோது வெளிவந்த படம். அப்போதே பொழுதுபோகாமல் போக எண்ணி இருந்ததுண்டு.. திரைப்படங்கள் குறித்த அப்போதைய ஆர்வமின்மையால் விட்டுப் போய்விட்டது..

‘கண்ட நாள் முதல்’ போல, சின்னவயதில் படித்த பி.வி.ஆரின் மேனேஜர் சேது கதை போல (நாவல் பெயர் மறந்துவிட்டது) ஏழு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட முறை பார்த்தாச்சு.. ஒரு சீன் கூட தள்ளிப் பார்க்கத் தோன்றவில்லை..

கோதாவரியில் படகில் ஏறி பத்ராச்சலம் போகும் வாய்ப்பும் ஒருதரம் ஹைதராபாத்தில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் இதன் அருமை தெரியாமல் விட்டுப் போய்விட்டது..

அழகான கோதாவரி, அழகான கமலினி, அமைதியான சுமந்த், நல்ல கதை, மிக மெல்லிய காதல் கதை… நன்றாக இருக்கிறது.. சொல்ல வந்தது ஒரு காதல் கதை மட்டுமே என்ற அளவில் அதைத் தாண்டிய கதாநாயகியின் பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பது என்னுடைய குறை.. ஆனால் நல்ல கதை.. அழகான காட்சியமைப்பு..

கமலினி அடிக்கடி சொல்லிக் கொள்வது போல், எனக்கே ஏதோ ‘குயின் விக்டோரியா’ என்ற எண்ணம் வந்து போகிறது.. ஓரிரண்டு சின்ன மைனஸ்களைத் தவிர கோதாவரி அழகு.. பத்ராச்சலத்துக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் இன்னும் தெளிவாக புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்… என்றாவது ஒருநாள் subtitleகளுடனான குறுந்தகடு வாங்கி பார்த்தால் புரிந்து போகும்.. பார்க்கலாம்.

பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீத அடிப்படையில் இருப்பதாலேயே இன்னும் அதிகம் என்னை ஈர்க்கிறது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட.. அதுவே இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

புடவை கட்டிக் கொண்டு மயங்கி மயங்கி வந்து நிற்கும் கமலினி, ‘நான் சீதா மகாலட்சுமியாக்கும், நான் ஏன் காதலை முதலில் சொல்லணும்?’ என்று ஏறிக்கொள்ளும் கமலினி, ‘என்கிட்ட உனக்குப் பிடிச்ச விசயம் என்ன?’ என்று சுமந்தைத் துருவித் துருவிக் கேட்கும் கமலினி, ‘அம்மம்மாவை என்கிட்ட கொடுத்துடேன்!’ என்று கொஞ்சும் கமலினி.. எனக்கே இவ்வளவு பிடித்து போய்விட்டது அவளை.. அப்படியே இரண்டு கையிலும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல..

கமலினியின் இந்த எல்லா செயல்களுக்கும் பதிலுக்கு எதுவுமே செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டே ஸ்கோர் பண்ணி விடுகிறார் சுமந்த். இந்த படத்தில் ஆர்வமாகி சுமந்தின் மற்ற இரண்டு படங்கள் பார்த்தது வருத்தம் தான். அவ்வளவு நன்றாக செய்யவில்லை.. இந்தப் படம் , இந்த அமைதி மட்டும் தான் ஒழுங்காக செய்ய வருகிறது போலும்..

மனசா வாச்சா, உப்பொங்கலே கோதாவரி, மனசா கெலுபு நீதேரா, எல்லாம் மனம் நிறைக்கும் பாடல்கள்.. இருங்க திரும்ப பார்த்துட்டு வரேன்..

The Rookie
பள்ளிக் கூடத்து பேஸ்பால் பயிற்சியாளர் ஒருவரிடம் அவரின் மாணவர்கள் சவால்விடுகிறார்கள். ‘பக்கத்து ஊர்ப் பள்ளியுடனான இந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தால், பெரிய அளவில் லீக் மாட்சுகள் விளையாட நீங்கள் முயல வேண்டும்!’ என்ற சவாலை ஏற்று, சின்ன வயதில் தன் கனவான, ஏதேதோ காரணங்களால் கிட்டாமல் போன லீக் மாட்சுகளுக்கு முயல கிளம்பிப் போகிறார் கதை நாயகன். கடன்கள், தினசரி குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை வழியனுப்பி வைக்கிறார் அவர் மனைவி.

நாற்பது வயதில் ரூக்கியாக(புதுவரவாக) வந்து சேரும் அவரை முதலில் சேர்த்துக் கொள்ள விரும்பாமல் பல குழுக்கள் தள்ளி வைக்கின்றன. மெல்ல தன் திறமையால் நாயகன் ஜிம் மாரிஸ் குழுவில் முன்னேறுவதும், சொந்த ஊருக்கே லீக் மேட்ச் ஆட வருவதும், அவரின் மாணவர்களே அவர் ஆடுவதைப் பார்க்க வருவதும் மிச்ச கதை..

கனவுகளை வென்றெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஆணித்தரமாகச் சொன்ன படம் - ஜிம் மோரிஸின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் எனும்போது இன்னும் அதிகமாக மனதைத் தைக்கிறது.

Field of Dreams
இதுவும் கனவுகளைப் பற்றிய, பேஸ்பால் படம் தான். பல வருடங்களில் பயணம் செய்து வரும் இந்தப் படம் பற்றி நான் எழுதுவதை விட நீங்களே கதை படித்து விடுங்கள். ஒரு மாதிரி படத்தின் கதை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இதை இங்கே வைத்திருக்கிறேன். மனம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால், நிச்சயம் நஷ்டமிருக்காது என்று சொல்லும் படம் இது..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

8 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com