pookri.com

பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;)

ஒரு வருட பாக்கி..

இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.

The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற ஒரு அழகான படம் தான் டைரி ஆப் ஆன் ப்ராங்க். இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஒளிந்து வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் கதை.

ஆச்சரியம் என்னவென்றால் ஆன(Anne - கடைசி e ஐ, அவுக்கும் ஆவுக்கும் இடையில் படிக்க வேண்டும்) ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய தன் சொந்த டைரி, உண்மைக் கதை. இரண்டு முழு வருடங்கள் மூன்று சின்ன அறைகள் கொண்ட வீட்டில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒளிந்து வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணப் போக்கு, தினசரி நடவடிக்கை, அந்தச் சூழ்நிலையில் கூட மலரும் மெல்லிய ஈர்ப்பு, காதல், அம்மாக்களுக்கும் பதினாறுகளில் இருக்கும் பெண்களுக்குமிடையில் இருக்கும் வழக்கமான புரிதலின்மை. இரண்டு முழு வருடங்கள் இரண்டு குடும்பங்கள் முழுமையாக ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தமையால் ஏற்படும் சங்கடங்கள், நெருக்கம், சண்டை என்று அன்றாட நிகழ்வுகளை அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆன..

படம் யாரோ சொன்னார்கள் என்று எடுத்துப் பார்த்தேன், அதன் பின் அந்தப் புத்தகத்தை அதைவிட ஆர்வமாக எடுத்துப் படித்தேன். அதுவும் ஒரு இனிமையான அனுபவம்…

Swing Kids
போர் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் பைத்தியக்காரத்தனம். ஹிட்லரின் ஜெர்மனியில் குஞ்சு குளுவான்கள் எல்லாம் யூதர்களை எதிர்த்து, எதிர்ப்படும் யூதர்களை எல்லாம் கொசு அடிப்பது போல் நசுக்கி விட்டுப் போனது பற்றி பியானிஸ்ட் பேசியதென்றால், அந்த ஒட்டு மொத்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தனித்து நின்ற மனிதர்களும் ஜெர்மனியில் இருந்திருக்கிறார்கள் என்கிறது swing kids.

ஹிட்லர் தீயது என்று ஒதுக்கிய அமெரிக்க பாப் இசையைக் கேட்டு, யூதர்களின் பாடல்களைப் பாராட்டி, இசைத்து வாழ்ந்த இந்தச் சில இளைஞர்கள், கலை மூலமாகவே நாசிக்களுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினார்களாம். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த பூமியில் உருண்டை என்று சொன்ன சாக்ரடீஸ் போல யூதர்களை மனிதர்கள் என்று நினைத்த இந்தச் சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு work campகளுக்கு அனுப்பப்பட்டனராம்.

‘ஹிட்லர் செய்வது தவறு என்றால் அவன் மட்டுமே அதற்குப் பொறுப்பல்ல. அவனைத் தவறு செய்ய விட்டுவிட்டு எதிர்ப்பு காட்டாமல் சும்மா இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பெரும்பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும். எதிர்ப்பைப் பதிவு செய்யுமிடம் வீடு மட்டுமல்ல.. வெளியில் செய்ய வேண்டும், உரத்துச் செய்யவேண்டும்’ - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எதிர்ப்பை அமெரிக்க யூத இசை மூலம் பதிவு செய்கிறான் பீட்டர்.

ஒரு காலத்தில் ஹிட்லரை எதிர்த்து, அவனின் செயல்களை வெறுத்து swing இரவுக் கிளப்களை கதி என்று கிடந்த இரண்டு இளைஞர்கள், நாசிப் படையில் சேர்ந்த பின்னால் எப்படி உருவேற்றப்பட்டுகிறார்கள், எப்படி சொந்த குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு வெறியேற்றப்படுகிறார்கள், அந்த மடத்தனத்திலிருந்து, நாஜிப் படைகளின் யூத வெறுப்பு மந்திரக்கட்டிலிருந்து எப்படி ஒருவன் மட்டும் வெளிவருகிறான், அதன் பின்னான அந்த நண்பர்களின் நட்பும் விரிசலும்.. கதை இரண்டு நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல. swing இயக்கம், நாஜிப் படைகளின் யூதவெறுப்பைப் பிஞ்சு மனங்களில் பதியவைக்கும் திறமை, நல்ல மனிதனாக வளரும் குழந்தைகள் எப்படி மதம்பிடித்த வெறியர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம்.. அழகான படம்..

The Prize winner of Defiance, Ohio
நம்மூர்ப் பெண்களைப் போல வேளா வேளைக்கு குடும்பத்தைக் கவனித்து, பொறுப்பில்லாத கணவனை மன்னித்து, அவனுக்கும் சேர்த்து தானே பணம் சம்பாதித்து - கடமை தவறாத அழகான அமெரிக்க மனைவி எவலின். கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகள் கொண்ட தனது வீட்டைக் கூட தன் சின்னச்சின்ன ஜிங்கிள் எழுதும் திறமையால் மட்டும் காப்பாற்றும் எவலின் அமெரிக்க வாழ்வியலில் கூட அமைவது எனக்குப் புதிது.

தன் எழுதும் திறமையைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற எழுத்தாளராகி இருந்திருந்தால் உலகம் பார்த்திருக்க முடியும். உலகம் எங்கும் சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தும் அந்தச் சின்ன கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் கட்டுண்டு கிடந்த எவலின் என்ன சாதித்தாள்? அவள் கதையை எழுதி உலகுக்குச் சொல்ல, அவளின் மகள் இல்லாமல் போயிருந்தால் சுவடு தெரியாமல் போயிருப்பாள். ஆனால் எவலின் போன்ற பெண்கள் தான் அடுத்த தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறார்கள்; அந்தக் குடும்பத்துக்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள்.

சிரித்த முகத்துடன், எத்தனை கஷ்டம் வந்தபோதும் புன்னகையோடு எதிர்கொள்ளும் எவலின் ஒரு கவிதையான பாத்திரம். பழைய காலத்துத் தமிழ்ப்படங்கள் காட்டும் பாசமான தாயாராவும், அடிபணியும் மனைவியாகவும் இருக்கும்போதும் சோகத்தைப் பிழியாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அம்மா வாத்தாக எவலின் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

A Family Thing
எல்லா ஊர்க் கதைகளிலும் பெண்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்களாக, ஆனால் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போபவர்களாக…

எல்லா ஊர்களிலும் பெண்கள் தான் அதிகமாக, சுலபமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். மிக இயல்பாக.. அவர்களின் எண்ணம் பற்றிய கவலை இல்லாதவர்களால் சுலபமாக.. (படம் பார்த்த அன்று எழுதி வைத்தது இது.. மேலும் தெரிந்து கொள்ள படம் பாருங்கள் அல்லது அது பற்றிப் படியுங்கள்..)

woh lamhe அந்தக் கணங்கள்.
அழகான சில கணங்களைப் பற்றிய ஒரு படம்.. அழகான காதல்.. அந்த அளவுக்கு உயிரினும் இனிய காதல்கள் பொய் என்ற எண்ணம் ஏனோ ஏற்படவே இல்லை. அது போன்ற ஒரு காதலுக்காக ஏங்குகிறது மனசு. வாழ்க்கை, எதிர்காலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணுக்காக மட்டுமே வாழும் ஒருவன் - வோ லம்ஹே ஒரு உண்மைக் கதையாம்! அது போன்ற ஒரு காதல் கிடைக்க பர்வீன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஷீஷ்ரோப்ரீனியா போன்ற வியாதி அவளைப் பிரித்தது தான் பாவம்..

The Dreamer - Sonador
ஒவ்வொரு மகளின் - மகனின் - கனவும் தன் தந்தை போல வரவேண்டும் என்பதே.. தந்தை தனக்கு அவ்வளவாக பிடிக்காத, அதனால் பழக்காத அவரின் தொழிலான பந்தயக் குதிரை வளர்ப்பை அவரே ஆர்வத்துடன் மகளுக்குக் கற்றுக் கொடுக்க வைக்கும் அழகிய பெண்ணின் கதை.. அந்தப் பெண் போன்றே அப்பாவின் தொழிலில் புகுவதற்கு எனக்கும் ஆசை என்பதாலோ என்னவோ இந்தப் படம் அத்தனை ஈர்த்துவிட்டது…

கோதாவரி (தெலுங்கு - இன்னும் தமிழுக்கு வராத தெலுங்கு :) )
அற்புதமான படம்.. செ.லூயிஸில் இருந்தபோது வெளிவந்த படம். அப்போதே பொழுதுபோகாமல் போக எண்ணி இருந்ததுண்டு.. திரைப்படங்கள் குறித்த அப்போதைய ஆர்வமின்மையால் விட்டுப் போய்விட்டது..

‘கண்ட நாள் முதல்’ போல, சின்னவயதில் படித்த பி.வி.ஆரின் மேனேஜர் சேது கதை போல (நாவல் பெயர் மறந்துவிட்டது) ஏழு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட முறை பார்த்தாச்சு.. ஒரு சீன் கூட தள்ளிப் பார்க்கத் தோன்றவில்லை..

கோதாவரியில் படகில் ஏறி பத்ராச்சலம் போகும் வாய்ப்பும் ஒருதரம் ஹைதராபாத்தில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் இதன் அருமை தெரியாமல் விட்டுப் போய்விட்டது..

அழகான கோதாவரி, அழகான கமலினி, அமைதியான சுமந்த், நல்ல கதை, மிக மெல்லிய காதல் கதை… நன்றாக இருக்கிறது.. சொல்ல வந்தது ஒரு காதல் கதை மட்டுமே என்ற அளவில் அதைத் தாண்டிய கதாநாயகியின் பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பது என்னுடைய குறை.. ஆனால் நல்ல கதை.. அழகான காட்சியமைப்பு..

கமலினி அடிக்கடி சொல்லிக் கொள்வது போல், எனக்கே ஏதோ ‘குயின் விக்டோரியா’ என்ற எண்ணம் வந்து போகிறது.. ஓரிரண்டு சின்ன மைனஸ்களைத் தவிர கோதாவரி அழகு.. பத்ராச்சலத்துக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் இன்னும் தெளிவாக புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்… என்றாவது ஒருநாள் subtitleகளுடனான குறுந்தகடு வாங்கி பார்த்தால் புரிந்து போகும்.. பார்க்கலாம்.

பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீத அடிப்படையில் இருப்பதாலேயே இன்னும் அதிகம் என்னை ஈர்க்கிறது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட.. அதுவே இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

புடவை கட்டிக் கொண்டு மயங்கி மயங்கி வந்து நிற்கும் கமலினி, ‘நான் சீதா மகாலட்சுமியாக்கும், நான் ஏன் காதலை முதலில் சொல்லணும்?’ என்று ஏறிக்கொள்ளும் கமலினி, ‘என்கிட்ட உனக்குப் பிடிச்ச விசயம் என்ன?’ என்று சுமந்தைத் துருவித் துருவிக் கேட்கும் கமலினி, ‘அம்மம்மாவை என்கிட்ட கொடுத்துடேன்!’ என்று கொஞ்சும் கமலினி.. எனக்கே இவ்வளவு பிடித்து போய்விட்டது அவளை.. அப்படியே இரண்டு கையிலும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல..

கமலினியின் இந்த எல்லா செயல்களுக்கும் பதிலுக்கு எதுவுமே செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டே ஸ்கோர் பண்ணி விடுகிறார் சுமந்த். இந்த படத்தில் ஆர்வமாகி சுமந்தின் மற்ற இரண்டு படங்கள் பார்த்தது வருத்தம் தான். அவ்வளவு நன்றாக செய்யவில்லை.. இந்தப் படம் , இந்த அமைதி மட்டும் தான் ஒழுங்காக செய்ய வருகிறது போலும்..

மனசா வாச்சா, உப்பொங்கலே கோதாவரி, மனசா கெலுபு நீதேரா, எல்லாம் மனம் நிறைக்கும் பாடல்கள்.. இருங்க திரும்ப பார்த்துட்டு வரேன்..

The Rookie
பள்ளிக் கூடத்து பேஸ்பால் பயிற்சியாளர் ஒருவரிடம் அவரின் மாணவர்கள் சவால்விடுகிறார்கள். ‘பக்கத்து ஊர்ப் பள்ளியுடனான இந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தால், பெரிய அளவில் லீக் மாட்சுகள் விளையாட நீங்கள் முயல வேண்டும்!’ என்ற சவாலை ஏற்று, சின்ன வயதில் தன் கனவான, ஏதேதோ காரணங்களால் கிட்டாமல் போன லீக் மாட்சுகளுக்கு முயல கிளம்பிப் போகிறார் கதை நாயகன். கடன்கள், தினசரி குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை வழியனுப்பி வைக்கிறார் அவர் மனைவி.

நாற்பது வயதில் ரூக்கியாக(புதுவரவாக) வந்து சேரும் அவரை முதலில் சேர்த்துக் கொள்ள விரும்பாமல் பல குழுக்கள் தள்ளி வைக்கின்றன. மெல்ல தன் திறமையால் நாயகன் ஜிம் மாரிஸ் குழுவில் முன்னேறுவதும், சொந்த ஊருக்கே லீக் மேட்ச் ஆட வருவதும், அவரின் மாணவர்களே அவர் ஆடுவதைப் பார்க்க வருவதும் மிச்ச கதை..

கனவுகளை வென்றெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஆணித்தரமாகச் சொன்ன படம் - ஜிம் மோரிஸின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் எனும்போது இன்னும் அதிகமாக மனதைத் தைக்கிறது.

Field of Dreams
இதுவும் கனவுகளைப் பற்றிய, பேஸ்பால் படம் தான். பல வருடங்களில் பயணம் செய்து வரும் இந்தப் படம் பற்றி நான் எழுதுவதை விட நீங்களே கதை படித்து விடுங்கள். ஒரு மாதிரி படத்தின் கதை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இதை இங்கே வைத்திருக்கிறேன். மனம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால், நிச்சயம் நஷ்டமிருக்காது என்று சொல்லும் படம் இது..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

8 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com

பிரகாஷுக்கு நன்றி

இப்பவெல்லாம் படம் பார்க்க அவ்வளவு நேரம் இருப்பதில்லை, ஆனா சின்ன வயதில் அதாவது 2000வது வருடம்வரை, அதற்கு முன்னால் வெளியான எல்லா படங்களையும் பார்த்திருப்பேன் என்றே நினைக்கிறேன். எத்தனை மொக்கை படமாக இருந்தாலும் சின்னத்திரையில் வரும் எல்லா குப்பையையும் படிக்கிற காலத்தில் பார்த்திருக்கிறேன். சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படம் பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு. சில படங்களை என் அம்மா ரொம்ப அதிக சோகம் என்று தடை செய்திருந்தார்கள் (துலாபாரம் போல) அவற்றைக் கூட அவர் இல்லாத நேரத்தில் பார்த்து முடித்திருக்கிறேன்.

ஒரு தரம் அப்பா சேனல் மாற்றிக் கொண்டே வரும்போதில், ஏதோ ஒரு அலைவரிசையில், ஒரே ஒரு ப்ரேம் சின்ன தலையாட்டி பொம்மை ஒன்று ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அது ‘காவியத்தலைவி’ என்று நான் சொல்ல, பாலச்சந்தர் படங்களின் அகராதி என்று தன்னை அதுகாறும் நினைத்திருந்த அப்பாவே அசந்து போய்விட்டார்! அந்த அளவுக்கு தமிழ்ப்படங்களின் encyclopediaவாக இருந்தவள் வேலைக்கு என்று வீட்டைவிட்டு வெளியேறியபின்னர் படம் பார்க்க நேரமோ ஆர்மோ இல்லாமல் போய்விட்டது. இப்போது இந்த ஊருக்கு வந்த பின் கிடைத்த வெற்று நேரத்திலும் இணைய வசதியிலும் தெலுங்குப் படங்கள், பழைய ஆங்கிலப்படங்களின் விக்கி பக்கமாக சீக்கிரமே மாறிவிடுவேன் என்று நினைக்கிறேன்.. அதற்கு முன் பிரகாஷாரின் மீமீயைப் பார்த்ததும் சுட்டுப்போடும் ஆர்வத்தை அடக்க முடியாமல்:

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
பத்து வயதில். நினைவு தெரிந்து முதல் படக் காட்சியாக நினைவிருப்பது புதுமைப்பெண் படத்தில் ரேவதி கோபமாக வரும் காட்சிகள் தாம்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அறை எண் 308இல் கடவுள். முதல் படத்தை நன்றாக எடுத்த சிம்புதேவன் ஏன் இப்படி அறிவுஜீவித்தனத்துக்கும், பாமர மக்களுக்கான படம் என்பதற்கும் இடையில் குழம்பிப் போய் ஒரு மசாலாவை உருவாக்கிவிட்டார்?!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
புதுமைப் பெண், புன்னகை, மனதில் உறுதி வேண்டும், அவள் ஒரு தொடர்கதை

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நான் எல்லாம் அண்ணன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்ச காலத்துலயே அரசியலில் குழந்தையாக்கும் :)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு முதல் கொலை செய்யும் விளையாட்டு. அந்த பந்து எங்கிருந்தோ எங்கோ வந்து கடைசியாக அம்பெறிவதை இன்று பார்த்தாலும் வியப்பதுண்டு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசித்ததுண்டு - பெரிசா ஒண்ணுமில்லை.. ஆ.வி, குமுதம்ல வருவதை மூன்று வருடம் முன்பு வரை வாசித்துக் கொண்டிருந்தேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
நல்லா இருக்கு. புதுசு புதுசாத் தான் செய்யறாங்க.. ஆனா நல்லாவே காப்பி அடிக்கிறாங்க.. ராசாவுக்கு அப்புறம் எனக்கு யுவன் பிடிக்கும், இப்பப்ப ஹாரிஸ் கூட நல்ல நல்ல பாடல்களாத் தான் (பிறமொழியிலிருந்து) தமிழுக்கு அறிமுகப்படுத்தறார். நல்ல கவிதையைப் பாடலாக்க வேண்டுமென்றால் வித்யாசாகரை மிஞ்ச யாருமில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம், இந்தி, தெலுங்கு எல்லாம் தேர்ந்தெடுத்த படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் எல்லாம் கமர்ஷியல் தான். அதிகம் தாக்கிய படங்கள் : Cars, Beyond those Gates, The Prize winner of Defiance, The Dreamer, Woh Lamhe(Hindi), Field of Dreams, Godavari (Telugu)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியா படம் பார்க்கிறதைத் தவிர ஒரு தொடர்பும் இல்லை :-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லா இருக்கு. சினிமாவைச் சினிமாவாக பார்க்க சமூகத்துக்குக் கற்றுக் கொடுப்பதில் தமிழ்ச்சினிமாவுக்கும் பங்கு இருக்க வேண்டும். இன்னும் அதிகமாக நம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியமாக சினிமாவும் மாற வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழுக்குப் பெரிய இழப்பாக இருக்கும். தமிழ் ஓரளவுக்கு அரை உயிராகவாவது வாழ்வதே சினிமாக்களில் தான் :-). ஆனால் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை.. சினிமா இல்லைன்னா சீரியல்னு நிம்மதியா இருப்பாங்களா இருக்கும். என்னைப் பொறுத்தவரை, தமிழ்ச் சினிமாவுக்கு வாய்ப்பே இல்லாத பல இடங்களில் இருந்திருக்கிறேன். என்கிட்ட இருக்கும் பழைய பாடல்களைப் பிடுங்காதவரை, சினிமா புதுசா வந்தாலும், வராவிட்டாலும் ஒண்ணுமில்லை :-)

சங்கிலிப் பதிவு என்று பிரகாஷ் ்சொல்லி இருந்தாலும், சங்கிலி ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருப்பதால், நான் இப்படியே தனி வளையமா விட்டுடறேன். அடுத்து கொஞ்ச நாள் முன்னால் மதுமிதா போட்டிருந்த நாவல்கள் குறித்த பதிவும் போடலாம்னு யோசனை இருக்கு.. ஜாக்கிரதை மக்கள்ஸ்…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

6 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com

ரயிலோடு உறவாடி..

ரயில் என்றாலே ஒரு மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கும் ரயிலைப் பார்த்தால் சின்னக் குழந்தை மாதிரி கடைசி பெட்டிவரை பார்த்துக் களிப்பது ஒரு பழக்கம். நான் பிறந்த புதிதில் எங்கள் வீடு மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தது. முதல் மாடி பால்கனியிலிருந்து ரயில் பார்ப்பது என்னுடைய சிறு வயது பொழுதுபோக்குகளில் முதன்மையானது.

பாட்டி இடுப்பிலேறி ரயில் பார்த்துக் கொண்டே உணவுண்ட நாட்கள் தொடங்கி மாமா மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது அவரின் காலைச் சுற்றிக் கொண்டிருந்த நாள்வரை அந்த பால்கனி நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன. காலை நேர சென்னையின் மின்சார ரயில்கள் நிரம்பி வழிந்து கொண்டு செல்வதிலிருந்து மாலை நேரம் அது திரும்பவும் மனிதர்களை நிரப்பிக் கொண்டு வந்து சேர்க்கும் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அந்த பால்கனிக்கு ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததுண்டு.

அம்மா ரயில் (அம்மா அலுவலகம் சென்று வரும் ரயில்) என்று தான் எட்டு முதல் எட்டரை வரும் ரயில்களை நாங்கள் குறிப்பிடுவோம். போகும் வரும் எல்லா ரயில்களுக்கும் கைகாட்டி விட்டு, அதில் யாராவது ஒரு பிரயாணி திரும்பி கையாட்டிவிட்டால் ஏற்படும் பூரிப்பு சொல்லி முடியாது. கொஞ்சம் வளர்ந்த பின், மாலை நான்கரைக்கு வரும் முத்துநகர் விரைவு வண்டியிலிருந்து எத்தனை மனிதர்கள் இறங்கினார்கள், எத்தனை பேர் ஏறினார்கள் என்று கணக்கிட்ட நாட்களும் உண்டு.

பன்னிரண்டு வயதில் அந்த வீட்டை விட்டு வேறு சொந்த வீடு கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியில் போக நேர்ந்த சமயம், ரயில் சத்தமில்லாமல் எப்படித் தூக்கம் வரும் என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்புறம் ரயில்புற வாழ்க்கை மெல்ல மறைந்து அமைதியான புறநகர் வாழ்க்கைக்குப் பழகியபின்னரும், ரயில் என்பது ஒரு ஆச்சரியமான விசயமாகவே இருந்திருக்கிறது.

அடுத்து ரயிலுடனான உறவு வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களோடு நின்றுவிட்டது. இன்றைய விமானப் பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணங்கள் அருமையானவை. விமானம் அல்லது பேருந்து போல ரயில் பயணங்கள் உடல் சோர்வைத் தருவதில்லை. பகல் வேளைகளில் ஜன்னல் அருகே அமர்ந்து இந்திய கிராமங்களின் வயலையும் வாய்க்காலையும் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், இரவின் தனிமையில் ரயிலிருந்து விழும் மெல்லிய வெளிச்சம் தரையில் விழுந்து உருண்டோடுவதைப் பார்ப்பது மற்றுமொரு சந்தோசம். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே விழுந்து ஓடும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது என்னுடைய கற்பனை பொங்கி நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் உதயமாவதுண்டு. ஊட்டியின் தள்ளு ரயில்களும், மலைப்பாதையில் திரும்பும்போது ரயிலின் உள்ளே இருந்துகொண்டே அதன் மற்ற பகுதிகளைப் பார்க்கக்கூடிய சில தருணங்களும் எப்போதும் ஆச்சரியம் தருபவை.

ஹைதராபாத்தில் வேலை பார்த்த காலங்களில் கிட்டத் தட்ட மாதமொருமுறை ரயில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். வேலைக்கு என்று முதன்முதல் செல்லும்போது தான் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துப் போனோம். என் அலுவலகத்தில் பயணச்செலவைத் திருப்புவதாக சொல்லி இருந்த காரணத்தால், நானே அப்பாவை இரண்டாம் வகுப்பில் அழைத்துச் செல்வது பற்றிய ஒரு பெருமை இருந்தது எனக்கு. அதற்கு முன் எத்தனையோ தரம் அப்பா இரண்டாம், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணித்திருப்பார் என்றாலும், மகளாக நான் அவரை அழைத்துச் சென்ற முதல் பயணமல்லவா!

திரும்பவும் அதற்கு அடுத்த மாதம் ஒரு வார இறுதி சென்னை வந்து போனதும் மறக்கமுடியாத பயணம் தான். முதன்முதலாக நான் மட்டும் தனியாக ரயிலில் வரப் போவதைப் பற்றிய ஒரு தயக்கமும், பயமும் இருந்துகொண்டே இருந்தது. வெளிக் காட்டவில்லை என்று நினைத்துக் கொண்டே தான் வந்தேன். ஆனால் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் அவள் தாயாரும் இரவு உணவின் போது, ‘தனியாளா வரியாம்மா?’ என்று கேட்ட போது பொறுக்காமல், நான் வேலைக்கு சேர்ந்தது தொடங்கி முழுக்கதையும் சொல்லித் தான் மூச்சுவிட்டேன். துணைக்கு நல்ல ஆள் கிடைத்ததாக மகிழ்ச்சி வேறு.

அதன்பின் எத்தனையோ தரம் அந்த ரயிலில் போய் வந்திருக்கிறேன் - நல்லகுண்டாவிலும் குண்டூரிலும் கிடைக்கும் ‘வெடிகா’ சமூசாக்களையும், கூடூரில் நடு இரவில் கிடைக்கும் சூடான தோசை, சில்லென்று ஒரு ஆப்பிள் ரசம் என்று ரவுண்டு கட்டி அடித்திருக்கிறேன்; அடுத்த மாத டிக்கெட்டுடன் வண்டியேறி, ‘என் பேரை எப்படி சார்ட்டில் விட்டுப் போச்சு’ என்று சண்டைபோட்டிருக்கிறேன்; நண்பர்களுடன் கொட்டமடித்து, பாட்டுப் பாடிக் கொண்டு, யாரும் இல்லாமல் தன்னந்தனியாக புத்தகம் படித்துக் கொண்டு என்று பலவிதமாக அந்த ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ருசிதான்.

இப்போது இந்த ஊருக்கு வந்த புதிதில், இந்த ஊரின் விதம்விதமான ரயில்கள் மீண்டும் என்னை குழந்தைக் காலத்துக்கு அழைத்துப் போய்விட்டது. உள்ளூரில் ஓடும் மரவட்டை போன்ற விடிஏ, கொஞ்சம் வெளியூராக பக்கத்து பெருநகரம் வரை ஓடும் இரட்டை அடுக்கு கால்டிரெயின், கடல் தாண்டி அடுத்த விரிகுடாவுக்கும் போகும் விரைவு வண்டியாக பார்ட், என்று பார்த்த எல்லா வண்டிகளிலும் ஏறி பயணம் செய்தாகிவிட்டது. இன்னும் கூட மிச்சம் இருக்கும் இருவகை ரயில்களில் ஏற நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருந்த போது, என் க்ளையண்ட் மேலாளர் வார இறுதிக்கு பிள்ளைகளை ரயிலில் வெளியூர் அழைத்துப் போவதாக மிக மகிழ்ச்சியோடு சொன்னார். அதென்ன பெரிய விசயமா என்று நினைத்த எனக்கு அவரின் அடுத்த சொற்கள் ஆச்சரியமாக இருந்தன : ‘என் பிள்ளைகள் இதுவரை ரயிலையே பார்த்ததில்லையா அதனால ரொம்ப உற்சாகமா இருக்காங்க’ என்றார். உலகத்தில் இப்படிப் பட்ட குழந்தைகள் கூட இருக்காங்களா! என்று வியந்து போனேன்..

நேற்று வண்டி எடுக்கையில், காரைக் கிளப்பிய பின்னால் பக்கத்தில் இருந்த இருப்புப்பாதையில் திடீரென்று ரயில் போவதைப் பார்த்து விட்டு டக்கென அப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கிய போது தான் எத்தனை நாளானாலும் இந்த ரயில் பார்த்துக் குழந்தையாகும் மனம் மாறவே மாறாது என்று புரிந்து போனது…

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

8 Comments
taintedsong.com taintedsong.com taintedsong.com